04 டிசம்பர், 2010

அட இவனுக்கு என்னவெல்லாம் தெரிகிறது என்று பொறாமை வரும்பொழுது என்ன செய்வது?

பொறாமை வரும்போது, இந்த ஔவையார் பாடல் நினைவுக்கு கொணர்தல் நல்லது. 
நம்மால் கூட சில காரியங்களை எளிதாக சிறப்பாக செய்ய முடியும். 
அதை செய்வோம். 
நாம் பொறாமை படுபவர்களிடமிருந்து அவர்கள் சிறப்பாக செய்யும் காரியங்களை பாராட்டிப் பெற்றுக்கொள்வோம்.

"வான் குருவியின் கூடு வல்சுரக்குத் தொல் கறையான்
தேன் சிலம்பி யாவருக்கும் செய்ய அரிதால் - யாம் பெரிதும் 
வல்லோமே என்று வலிமை சொல வேண்டாம் கான் 
எல்லோர்க்கும் ஒவ்வொன்று எளிது!"  - ஔவையார்

 தூக்கணாங் குருவியின் கூடு, வலிமை உடைய அரக்கு, பழைமையான கறையான், தேன், சிலந்திக் கூடு, இவை யாவர்க்கும் செய்ய அரிதானவை, எனவே 'யாம் பெரிய'  என  தற்சிறப்புப் பேச வேண்டாம். எல்லோருக்கும் ஒவ்வொரு காரியம் எளிதானது, எப்போதும்! 


சில பல படங்களை பார்த்து வைத்துக் கொள்கிறேன். அடுத்த கேள்வியாக 'சமீபத்தில் ரசித்த புகைப்படம் எது?'வென கேள்வி கேட்டுக்கொள்கிறேன். ஒரு ஐந்து புகைப்படங்களை பிரசுரித்து அடுத்த பதிவை ஜமாய்கிறேன். 

எதேர்ச்சையாக இதை படிக்க நேரிடுபவர்களுக்கு நன்றி. இங்கு இருக்கும் கேள்விகளுக்கு தாங்களும் சின்னதாக, சிக்காக பதில் தரலாம் - காமென்ட் பகுதியில்

31 அக்டோபர், 2010

ஸ, ரி,க, ம, ப, த, நி என்ற எழு ஸ்வரங்கள் என்றால் என்ன தெரியுமா?

சட்ஜம் (மயிலின் நாதம்)                               - ஸ 
ரிஷபம் (மாட்டு சத்தம்)                                  - ரி
காந்தாரம் (ஆடு போடும் சத்தம்)                   -க 
மத்யமம் (பறவையின் கூவல்)                     - 
பஞ்சமம் (குயிலின் ஒலி)                                -ப 
தைவதம் (குதிரையின் கனைப்பு)                 -த 
நிஷாதம் (யானையின் பிளிறல் )                 -நி           




அடுத்த கேள்வி: அட இவனுக்கு என்னவெல்லாம் தெரிகிறது என்று பொறாமை வரும்பொழுது என்ன செய்வது?
எதேர்ச்சையாக இதை படிக்க நேரிடுபவர்களுக்கு நன்றி. இங்கு இருக்கும் கேள்விகளுக்கு தாங்களும் சின்னதாக, சிக்காக பதில் தரலாம் - காமென்ட் பகுதியில். 

30 ஜூன், 2010

மனோ திடமான நம்பிக்கை என்பது யாது?

  • இருள் சூழ்ந்த நேரங்களில் வெற்றி என்ற வெளிச்சத்தைப்  பார்ப்பது. 
  • நம்மால் முடியும் என்பவைகளை முன்னால் கொண்டுவந்து செய்வது.
  • 'தொப்' பென்று தோல்வியில் விழுந்தபோது 'சடாரென' எழுந்திருப்பது.
  • கடினமான கடினங்களில் புகுந்து பார்ப்பது.
  • துளியும் பயமில்லாமல் எதிர்காலத்திற்கு முகத்தை காண்பிப்பது.
  • கவலை என்ற காசோலையை அமைதி என்ற பணமாக மாற்றிக்கொள்வது.
  • கல்லைப்போல் நமது நம்பிக்கைகளில் உறுதியாக நிற்பது. 
  • "கண்டிப்பாக வெற்றி கொள்வேன்" என்ற உறுதியிலிருப்பது. 


(ஷுலர் "திடமான நம்பிக்கைப் பற்றி )
அடுத்த கேள்வி ச ரி க ம ப தா நி ச பற்றி தெரிந்ந்து கொள்ளலாமா? 

15 மே, 2010

பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருக்கும் கேள்வி பதில் எது?

பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருக்கும் கேள்வி பதில் எது?
குமுதம் பத்திரிகையில் அரசு பதிலளித்தது. எஸ்.எ.பி ஆசிரியராக இருந்த காலமது. மனைவி உதவியுடன் ஒரு டயரியில் கத்தரித்து ஒட்டி வைத்துக்கொண்டுள்ளேன்.  அதை இப்பொழுது இந்த வலைதளத்தில் பதிவு செய்துகொள்கிறேன்.
எப்போதும் உற்சாகத்துடன் வாழ கற்றுக்கொடுக்கும் நூல்க்களில் சிறந்தது? 
ராபர்ட் ஷுலர் என்று ஒரு புதுமுகம். நார்மன் வின்சென்ட்பீல் இருக்கிறாரே, அவர் கோத்திரம். அவருக்கு பாசிடிவ் திங்கிங். இவருக்கு? பாசிபிலிடி திங்கிங்.
ஷுலர் சொல்லுகிறார்: 
1.சில சமயம் அடித்துப்போட்டாற்போல் களைப்பாக இருக்கும். உண்மையில் அது களைப்பு அல்ல. உடல் ஓய்வு எடுத்துக் கொள்கிறது. அவ்வளவுதான். ஓய்வு எடுத்துக் கொண்டானதும் பழையபடி உற்சாகமாக இருப்பீர்கள்.
2. சோம்பலால் சில சமயம் களைப்பு உண்டாகலாம். எழுந்திருங்கள். ஏதாவது செய்யுங்கள். தேக பயிற்சி, உலா இப்படி.   
3. நம்மில் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எக்கச்சக்கமான பலம், சக்தி இருக்கிறது. தேவை ஏற்படும்போது அது வெளிப்படும்.
4.ஏதாவது ஒரு குறிக்கோள், ஒரு லட்சியம் இருந்தால் உற்சாகம் தானே பெருக்கெடுக்கும். நோக்கமில்லாத வாழ்க்கை, பலத்தை உறிஞ்சிவிடும். 
5. "நம்மால் முடியாது. இதை எப்படி செய்து முடிக்கப் போகிறோம்" இந்த மாதிரி 'ஙே' எண்ணங்கள் உதவாது.
6. தன்னம்பிக்கையில்லாத தோல்விவாதிகளுடன் சேராதீர்கள். அவர்கள் தீண்டத்தகாதவர்கள். நல்ல சுறுசுறுப்பானவர்கள், வெகு உற்சாகமுள்ளவர்கள் - இவர்களுடனேயே உறவு வைத்துக் கொள்ளுங்கள்.  
7. "சோர்ந்து போய்விட்டேன்" என்று சொல்லிக் கொள்ளாதீர்கள். "சுறுசுறுப்பாக இருக்கிறேன். உள்ளங்காலிலிருந்து உச்சந்தலைவரை என்னுள் சக்தி பாய்கிறது .... நான் பலசாலி ! நான் பலசாலி! " என்று சொல்லிக்கொள்ளுங்கள். பொய்தான். சொல்லச் சொல்ல, பொய்யே உண்மையாகும். 
8. வாரத்துக்கு ஒரு முறையேனும் கோவிலுக்குப் போங்கள்.
9. அவனிருக்க பயமேன்? துணிவுடன் வாழ்க்கை நடத்துங்கள். 
10. அட்வான்ஸாக நன்றி தெரிவிக்கப் பழகிக்கொள்ளுங்கள். "ஆண்டவனே! என்னுள் எவ்வளவோ சக்தியும் திறமையும் இருக்கின்றன. அவற்றை வெளிப்படுத்த உதவியதற்கு நன்றி. எனக்கும் பிறருக்கும் அதனால் நன்மை ஏற்பட வழி செய்ததற்கு நன்றி. நான் எப்போதும் உற்சாகம் உள்ளவனாக இருக்கிறேன். அதற்கு நன்றி." என்பது போன்ற பிரார்த்தனைகளைச் செய்யுங்கள்.

ஷுலர் உண்மை பேசுகிறாரோ ரீல் விடுகிராறோ?    தெரியவில்லை. ஒரு முறை பரீட்சை பண்ணிப் பார்த்தால் போயிற்று.

அடுத்த பதிவிற்கான கேள்வி: மனோதிடமான நம்பிக்கை என்பது என்ன?

இந்தப்பதிவை படிப்பவர்களும் கேள்விகளுக்கு அவர்கள் மனதில் தோன்றும் பதிலை எழுதலாம்.
ஏதாவது கேள்வி கேட்க தோன்றினால் கேட்கலாம். ஆனால் பதில் தெரிந்தால் தான் பதிவு செய்ய முயற்சிப்பேன்.



--
cgbalu from Hubbali

03 ஏப்ரல், 2010

"பைக் எண்ணங்கள் என்பது யாது?"

மோட்டார் பைக் ‍‍‍‍‍‍‍‍‍‍‍ஸ்டார்ட் செய்து, ஏறி உட்கார்ந்து ரைட் பண்ண ஆரம்பித்து விட்டால் தனி குஷி.

இப்பொழுது என்னிடமுள்ளது நீலக்கலர் பஜாஜ் பிளாட்டினா. "கிக்" ஸ்டார்ட் செய்யும் வயதெல்லாம் கடந்து விட்டதால், வலது கை கட்டை விரலால் அமுக்கி இயங்க வைக்கும் இயந்திரமிது.

கட்டை விரலால் அமுக்கி, உந்து கியர் போட்டு, நகரும் கியர்களை ஒவ்வொன்றாக மாற்றி வண்டி நகர தொடங்கி விட்டால் - ‍‍எது எங்கு அமுக்கப்படுகிறதோ, எந்த கிளட்சை பயன் படுத்துகிறதோ, எந்த கியர்கள் மாற்றப் படுகிறதோ தெரியாது - எண்ணங்களும் போட்டி போட்டுக் கொண்டு ஓட தொடங்கிவிடும். நான் வண்டியை ஓட்டும் வேகத்தை விட எண்ணங்கள் வேகமாக ஓடும்.



உற்சாக எண்ணங்கள் தான் அதிகம்.

ஆபீஸ், வீடு, மனைவி மக்கள் குறித்து எண்ணங்கள் இருக்கும்.

திடீரென ஒரு ஐடியா உதிக்கும். அப்பொது கடல் அலைகள் கொப்பளிப்பது போலிருக்கும்.

சமீப காலமாக் ட்விட்டரில் 140 வார்த்தைகள் எழுதும் பைத்தியம் பிடித்திருப்பதால், ஓராயிரம் ட்வீட்கள் உதயமாகும்.

இந்த உலகத்திற்கே நான்தான் அதிபதி என்ற திமிர் நிலையில் இருப்பேன்.

இப்படித்தானே, ஒரு நாள் பைகில் ரைட் செய்யும்போது வந்த ஒரு எண்ணம் இப்போது பதிவாக அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

"பைக் எண்ணங்கள்" பைக்கை விட்டு கீழே இறங்கியவுடன், மறைந்து விடுவதால், எண்ணங்கள் எண்ணங்களாகவே இறந்து விடுகிறது.

பைக்கில் போகும்பொழுது, வந்த ஒரு ஐடியாவை சாவா வரம் கொடுத்து, பிடித்து வைத்திருக்கிறேன். "பைக் எண்ணங்கள்" குறித்து இந்த கேள்வி பதிலை அவ்வப்போது தொடரும் வாய்பு உள்ளது. அதாவது "கேள்வியும் நானே பதிலும் நானே" பகுதிக்கு கேள்விகள் எதுவும் தோதாக கிடைக்கவில்லையென்றால், இருக்கவே இருக்கிறது ஒரு தயார் கேள்வி: "பைக் எண்ணங்கள் என்பது யாது?"

இந்தப்பதிவை படிப்பவர்கள் தங்கள் எண்ணங்களை பதிலாக பின்னூட்டமிடலாம். கேள்விகளும் கேட்கலாம். பதில் தெரிந்தால் அதை ஒரு பதிவாகச் செய்ய முயற்சி செய்கிறேன்.

அடுத்த கேள்விக்கான ஐடியா: (இதுவும் பைக்கில் செல்லும்பொழுது வந்த எண்ணம்தான்)
நான் பொக்கிஷமாக வைத்திருக்கும் கேள்வி பதில் எது?

கடவுளின் அருள்